About me

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். வாழ்க்கை என்பது தேடல்கள் நிறைந்தது. தேவைகள், ஆசைகள் இலட்சியங்கள் யாவும் தேடலின் ஊற்றுக் கண்ணாய் விளங்குகின்றன. ஒன்று அடுத்து மற்றொன்று என தொடர் கதையாய் விரியும் விடியலை நோக்கிய விருப்பங்கள். தேடலின் அனுபவமே அவரவர் வாழ்க்கையின் பதிவுகளாகின்றன.

என்னுடைய தேடலும் சுமார் 15 வருடங்களுக்கு முன் தீவிரமாகியது. சூழ்நிலை கைதியாய் காலத்தின் சக்கரத்தில் ஓயாது, இன்ப துன்ப நிலைகளாய் சுழன்றாடும் வாழ்க்கை என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. வாழ்க்கை, நான், இன்ப துன்ப சுழற்சி, முடிவான நிலை, இறைவன் என அனைத்திற்கும் தெளிவு காண இதயம் ஏங்கியது. பல ஆன்மீக குருமார்களின் வழிகாட்டுதல், தியான பயிற்சி என தொடர்ந்தது.

பல்வேறு அனுபவங்களாய் பரிணமித்த தியான பயிற்சிகள், ஒரு கட்டத்தில் நீ, நான் என்று எதுவும் உணர முடியா நிலையில் அனைத்தும் நின்று போனது. ஏதும் செய்ய இயலாத நிலையில் நான் இதுவரை தேடிக்கொண்டிருந்தது என்னைத்தான் என்பதை உணர்ந்தேன். என்னுடைய தேடல் என்னிடமே வந்து முடிந்தது. இதை உணர்ந்த அக்கணத்தில் என்னுள் இருந்த முரண்பாடுகள் அனைத்தும் மாயமாய் மறைந்து போயின. என் குறைகளை பெரிதுபடுத்தி வேறு எதுவாகவோ ஆக வேண்டும் என்று கண்ட கனவுகள் அனைத்தும் கலைந்தன.

எக்கணத்தில் வருவான் இறைவன் என ஏங்கி கொண்டிருந்தவளுக்கு, இக்கணமே இறைவன் என்பதை உணர வைத்தான். என்னை இறுக பற்றியிருந்த தளைகள் அறுந்ததாய் ஓர் உணர்வு. புறத்தே இருந்து எதுவும் தொடமுடியாத ஒரு வெற்றிடம். ஏகாந்த உணர்வு. அமைதியை என்னுள் உணர்ந்தேன். அனைத்தையும் உள்ளபடியே மனம் ஏற்றுக் கொண்டது. வெளியே யாரையோ மாற்ற முனைந்தது முடிந்து போனது.

என்னையே நான் முழுதாய் ஏற்றுக்கொள்ள, அன்பின் உண்மையான விளக்கத்தை உள்ளம் உணர்ந்தது. என் அனுபவ உணர்வுகளே அவ்வப்போது கவிதைகளாய் ஊற்றெடுத்ததன. “தானாய் தோன்றியதை தற்செயலாய் எழுதி வைத்தேன்.” அக்கவிதை தொகுப்புகளே இந்நூல். படிப்போருக்கு ஒரு சிறு தீப்பொறியாய் வெளிச்சம் தந்தாலும் மிகவும் மனம் மகிழ்வேன்.